இட்லிக்கு அரிசி, உளுந்து ஊற வைக்கும் போது புது உளுந்தம் பருப்பு என்று தெரிந்து ஒரு கைப்பிடி குறைவாக எடுத்து ஊற வைத்தேன். ஆனாலும் மாவு கிரைண்டரில் சுத்தும் போது மாவின் அளவு பொங்கி கிரைண்டர் விளிம்பில் வழியும் அளவு பொங்கி வந்தது. உளுந்து அளவு அதிகமாக இருந்தால் இட்லி நன்றாக வராது என்ற காரணத்தால் சிறிது மாவை தனியாக எடுத்து விட்டு இட்லிக்கு மாவு கலந்தேன்.அந்த சிறிது மாவில் என்ன செய்யலாம் என்று யோசித்த போது தோன்றிய ஐடியாதான் இந்த தேன்மிட்டாய்.
செய்து பார்த்தேன்... மிக நன்றாக வந்தது.தேவையான பொருட்கள்:-
- உளுந்து மாவு (கிரைண்டரில் அரைத்தது) - 2 கைபிடி
- மைதா மாவு - 2 ஸ்பூன்
- அரிசி மாவு - 2 ஸ்பூன்
- ஜீனி - 100 கிராம்
- எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:-
- உளுந்து,மைதா,அரிசி மாவுகளை ஒன்றாக கலந்து தண்ணீர் ஊற்றாமல் நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
- ஒரு பாத்திரத்தில் ஜீனியை கொட்டி அது முழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கம்பி பதத்திற்கு பாகு வைக்க வேண்டும்.
- வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடான உடன் மாவு கலவையை சிறிது சிறிதாக ஊற்றி அது நன்றாக பொரிந்து வந்த உடன் எண்ணெய்யை வடித்து விட்டு ஜீனிப்பாகில் போட்டு இரண்டு நிமிடம் கழித்து தனியாக எடுத்து தட்டில் வைக்க வேண்டும்.
- தேன் மிட்டாய் தயார்.
- சீனிப்பாகு சூடாக இருக்கும் போதே எண்ணெய்யில் வடித்த உருண்டையை போட வேண்டும்.இவ்வாறு செய்தால் உருண்டை பாகை நன்றாக உள்வாங்கும்.