முட்டைகாய் கிரேவி ( கத்திரிகாய் கிரேவி)
வணக்கம் உறவுகளே..! சிறிது இடைவெளிக்கு பின் மீண்டும் உங்கள் அனைவரையும் சுவையான கிரேவியுடன் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இதை கிராமத்தில முட்டைக் காய் என்று சொல்வாங்க...கிராமத்தில இந்த கிரேவி ரொம்ப பேமஸ் . இந்த கிரேவி சிக்கன், மட்டன் பிரியாணி வகைகளுக்கும், விழா காலங்களில் விருந்து வைக்கும் போது இடம் பெறும் பல வகை சைட் டிஷ்களில் இதுவும் இடம் பெறும். தயிர் சாதத்துக்கும் இந்த கிரேவி ரொம்ப பொருத்தம். பிஞ்சு கத்திரிக்காயாக இருந்தால் இதன் சுவை அபாரமாக இருக்கும். பிஞ்சு காய் கிடைக்கும் போது நீங்களும் செய்து பாருங்க..:)
தேவையான பொருட்கள்:
- பிஞ்சு கத்தரிக்காய் - கால் கிலோ
- சின்ன வெங்காயம் - 7
- புளி குழம்பு மசால் பொடி - இரண்டு ஸ்பூன்
- மிளகாய் பொடி - ஒரு ஸ்பூன்
- புளி - எலுமிச்சை அளவு
- உப்பு - தேவையான அளவு
- கடுகு உளுந்து - ஒரு ஸ்பூன்
- கருவேப்பிலை - ஒரு ஆர்க்கு
- எண்ணெய் - 100 மில்லி
செய்முறை:
- கத்திரிகாயை நன்கு கழுவி காம்பை நீக்கி விட்டு காம்பு பகுதியில் நீள வாக்கில் கீறி விட வேண்டும்.
- வெங்காயத்தை உரித்து பொடியாக கட் பண்ண வேண்டும்.
- அடுப்பில் வாணலியை வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து போட்டு வெடித்ததும் நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை போட்டு வதக்க வேண்டும்.
- வெங்காயம் வதங்கிய உடன் கத்தரிகாய் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு மசால் பொடி, மிளகாய் பொடி போட்டு ஒரு நிமிடம் பிரட்டி விட வேண்டும்.
- பிரட்டிய கலவையில் ஒரு கப் தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும்.
- தண்ணீர் வற்றி சுண்டும் போது புளி கரைசலை ஊற்றி வேண்டிய உப்பையும் போட்டு கிளறி 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
- காய் வெந்து தண்ணீர் வற்றி கிரேவியாக வந்த பின் வாணலியை இறக்கி வைக்கும் போது மீதமுள்ள எண்ணெயை ஊற்றி நன்றாக பிரட்டி விட்டால் முட்டைகாய் கிரேவி தயார்.
- கிராமங்களில் மீன் குழம்பு, கருவாட்டு குழம்பு செய்யும் பொழுது குழம்பு கொதித்து இறக்கி வைக்கும் பொழுது நல்லெண்ணெய் ஊற்றி இறக்கி வைப்பார்கள். சிலர் வெல்லத்தை சேர்த்தும் செய்வார்கள்.
வீட்டு தோட்டம்
நம்ம வீட்டு தோட்டத்தில ( தொட்டியில) விதை போட்டு அதுல கிடைக்கிற பயன்பாட்டை அனுபவிக்கிறதே தனி சந்தோஷந்தான்.. மகியோட தொட்டி தோட்டத்தை பார்த்து ஒரு ஈடுபாட்டோட வீட்டில் ஆரம்பித்த தொட்டி தோட்டம் சமீபத்தில் நாங்கள் ஆரம்பித்த வாட்டர் சர்வீஸ் ஸ்டேஷனில் தோட்டம் போட ஐடியா வந்தது. பஸ், லாரி கழுவிய தண்ணீர் வீணாகாமல் அது போகும் பாதையில் தோட்டம் அமைத்தேன். ஆயில் சேர்ந்த தண்ணீரால் விளைச்சல் கம்மியாகி போனது. வீட்டிற்கு தேவையான காய் வந்தது. பூசணி காய் அங்கு வேலை செய்பவர்களும் பயன் பெறும் வகையில் நன்றாக காய்த்தது. இப்பொழுது ஆயில் பில்டராகி தண்ணீர் சுத்தமாக வரும்வகையில் வேலை செய்தாகி விட்டது. இனி வாழை , தென்னை வைக்க வேண்டும். இப்போல்லாம் புதினா தேவையானது வீட்டிலேயே கிடைக்கிறது. கடையில் வாங்குவது இல்லை.
தட்டை பயிர்
பாகற்காய்
பூசணி
தர்பூசணி, வெண்டைகாய்
புதினா
வெற்றிலை, ஓமவல்லி, மஞ்சள்
கருவேப்பிலை ஜுஸ்
வலையுலக உறவுகள் அனைவருக்கும் வணக்கம். கோடை தொடங்கி வெயில் வாட்டி எடுக்கிற நேரம்... இந்த பதிவு அனைவருக்கும் உபயோகமானதாக இருக்கும். ஏன்னா அதிக வெயிலால் நிறைய பேருக்கு உடல் சூடும், வாய் புண்ணும் , கொப்புளங்களும் வருவதுண்டு. வருமுன் காப்பது நன்று.. இல்லீங்களா... வந்தாலும் இந்த கருவேப்பிலை ஜுஸ் செய்து சாப்பிட்டால் இந்த தொந்தரவுகள் எல்லாம் போயே போச்சு.. என் அனுபவத்தைதான் பதிவுல சொல்றேன். வாய் புண்ணினால் பட்ட அவஸ்தை இந்த ஜுஸ் குடித்தவுடன் போயிந்தி.. நீங்களும் செய்து பார்த்து சொல்லுங்க.
தேவையான பொருட்கள்:
- கருவேப்பிலை - ஒரு கைபிடி
- பனங் கற்கண்டு - 50 கிராம்
- தேங்காய் பால் - அரை கப் (முதல் பால்)
- எலுமிச்சை சாறு - அரை ஸ்பூன்
செய்முறை:
- கருவேப்பிலையை நன்றாக கழுவி மிக்சியில் போட்டு சிறிது நீர் விட்டு (அரை கப்) அரைத்து 100 மில்லி அளவிற்கு ஜுஸ் எடுக்க வேண்டும்.
- தேங்காயின் பாதி மூடியில் துருவி எடுத்த துருவலை மிக்சியில் போட்டு திக்கான பாலாக அரை கப் எடுக்க வேண்டும்.
- பனங் கற்கண்டை நன்றாக பொடித்து அதில் எலுமிச்சை ரசம், தேங்காய் பால், கருவேப்பிலை ஜுஸ், அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்தால் ஜுஸ் ரெடி.