தலைப்பே வித்யாசமான பேரா இருக்குனு நினைக்கிறீங்களா.. எங்க ஊர்ல இந்த பொரியலுக்கு இதுதாங்க பேர்.:) நான் செய்த பொரியலில் இரண்டு காய்தான் சேர்த்துள்ளேன். ஆனால் இதனுடன் குடைமிளகாய், அல்லது பீன்ஸ் சேர்த்து செய்வார்கள். மூன்று காய் பேர் சேர்த்து சொன்னால் நீ....ளமா இருக்கும்னு இப்பிடி ஒரு பேர் வச்சாங்களோ என்னவோ.. இரண்டு, மூன்று காய் இருப்பதால் கலர்புல்லா இருக்கும்.. என்ன என்ன காய்னு யாரையும் பார்க்க வைப்பதனால் இந்த பெயர் வந்திருக்கலாம். எதுக்கு இவ்வளவு பில்டப்னு நீங்க கேட்குறது என் காதுல விழுது...ஏன்னா பதிவ படிச்சிட்டு அதென்ன திரும்பி பார்..! அப்பிடின்னு யாராச்சும் கேட்டீங்கன்னா .. :)
Read More...
தேவையான பொருட்கள்:-
- காரட் - 200 கிராம்
- முட்டைகோஸ் - 200 கிராம்
- சின்ன வெங்காயம் - 10
- பச்சை மிளகாய் - 4
- தேங்காய் - சிறிது
- கடுகு,உளுந்து - 1 ஸ்பூன்
- சீரகம் - 1 ஸ்பூன்
- உப்பு - சிறிது
செய்முறை:-
- காரட்டையும் முட்டைகோசையும் பொடியாக துருவிக்கொள்ள வேண்டும். வெங்காயத்தையும் பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.
- அடுப்பில் வாணலியை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடான உடன் கடுகு, உளுந்து போட்டு வெடிக்க விட்டு வெட்டி வைத்த வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு நன்கு வதக்க வேண்டும்.
- வெங்காயம் வதங்கிய உடன் முட்டைகோஸை போட்டு வதக்க வேண்டும்.
- முட்டைகோஸ் முக்கால் பாகம் வெந்த உடன் காரட்டை போட்டு வதக்க வேண்டும்.
- இரண்டும் வதங்கிய உடன் மிக்சியில் அரைத்து வைத்த தேங்காய் , சீரக கலவையை போட்டு தேவையான உப்பையும் போட்டு நன்கு பிரட்டி விடவேண்டும்.
- 2 நிமிடம் வதக்கி விட்டு அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும்.
- திரும்பிப்பார்பொரியல் தயார்.







