Showing posts with label முகப்பு. Show all posts
Showing posts with label முகப்பு. Show all posts

தாழம் பூ

17 comments
       வீட்டின் பக்கத்தில் இருந்த மரத்தில் இருந்த பறவைகள் கத்திய ஒலியும், சேவலின் கொக்கரக்கோ கூவலும் கங்காவிற்கு காலை விடியலை உணர்த்தியது. படுக்கையில் இருந்து எழுந்தவள் இரண்டு நாட்களாக கண்ணம்மா வேலைக்கு வரவில்லை. இன்றாவது வருவாளா.. உடம்பு சரியாகி இருக்கும், வருவாள் என்று எண்ணிக் கொண்டே காலை கடன்களை முடித்தவள் மற்ற வேலைகளை செய்ய சுறு சுறுப்பாக ஆயத்தமானாள். காபி டிகாஷனை இறக்கி பால் சேர்த்து நுரை பொங்க ஆற்றிக் கொண்டே கணவனை எழுப்பினாள். அவளுடைய கணவன் சதாசிவம் காபியை குடித்து முடிக்கும் வரை அருகில் இருந்தவள் படுக்கை அறையை சுத்தம் செய்து கொண்டே மெல்ல கணவனிடம் ஏங்க... இந்த வாரம் நல்ல நாள் பார்த்து வளைகாப்பு செய்து நம்ம சுமதியை வீட்டுக்கு அழைத்து வரணும், இப்ப அவளுக்கு இது ஏழாவது மாதம் என்றாள். சதாசிவமும் சரி அழைத்து வருவோம் என்றார்.

       கிறீச்சென்று கேட் திறக்கும் சத்தம் கேட்டது. கண்ணம்மாதான் கேட்டை திறந்து வந்து கொண்டிருந்தாள். அப்பாடா... வந்தாச்சா.. உடம்பு சுகமாயிருச்சா... நீயில்லாம வேலையே ஆக மாட்டேங்குது கண்ணம்மா.. இந்தா முதல்ல இந்த காபியை குடி, அடுத்து வேலையை பாக்கலாம் என்றாள். காலை டிபன் தயார் பண்ணி கொண்டிருந்த வேளையில் அம்மா.. நம்ம பாப்பாவை எப்ப கூப்பிட போறீங்க..? கல்யாணத்தப்ப பாத்தது நம்ம சுமதியம்மாவை..என்றாள். ஆமா.. கண்ணம்மா இந்த வாரம் வளைகாப்பு வச்சிருக்கு.. நீயும் கூட வா.. என்றாள். அம்மா நா ஒரு மனுஷின்னு என்னைப் போயி கூப்பிடறீங்க.. வெற்றிலை கரை படிந்த பல் தெரிய வெள்ளந்தி சிரிப்புடன் கேட்டாள் கண்ணம்மா.ஏன் கண்ணம்மா நீ வயசுல பெரிய மனுஷி.. சுமதிய தூக்கி வளர்த்தவ.. தொடர்ந்து ரெண்டு வருஷம் ஒரு வீட்ல வேலை பார்க்க முடியாம வேற வீட்டை பார்த்து போற இந்த காலத்தில நீ இந்த வீட்டுக்கு இருபது வருஷமா தினம் வந்து வேலை பாக்குறே... நீயும் இந்த வீட்டை சேர்ந்த ஒரு உறவுக்கார பெண்தான். அதனால இந்த வாரம் சுமதிய போய் பார்த்து வளைகாப்பு செய்து அழைத்து வருவோம் என்றாள். இதை கேட்டு சிரித்துக் கொண்டே சரிம்மா வர்றேன் என்று சொல்லி விட்டு வேலைகளை செய்ய துவங்கினாள்.

       வளைகாப்பிற்கு சுமதியை அழைக்கும் அன்று கண்ணம்மா கொப்புகொண்டை போட்டு கனகாம்பரம் சூடி கண்டாங்கி சேலையோடு வீட்டிற்கு வந்து மாங்கு மாங்கென்று சாதவகைகள் செய்து கங்காவிற்கு அனைத்து உதவிகளையும் செய்து அனைவரோடு சேர்ந்து ஊருக்கு கிளம்பினாள். மாப்பிள்ளை வீட்டில் கலகலப்பாக அனைவரையும் வரவேற்று உபசரித்தனர்.சுமதிக்கு கண்ணம்மாவின் உடை, வெற்றிலை வாய் இவையெல்லாம் பிடிக்காமல் கங்காவின் காதோரம் மெல்ல கிசு கிசுப்பாக ஏம்மா.. இவளையெல்லாம் கூட்டிட்டு வந்தே.. மாமியார் வீட்டில் என் மானம் கப்பல் ஏறிடும் என்று கோபத்துடன் கேட்க முறைப்புடன் கங்கா மகளை சும்மா இருடி அவ உன் மேல எவ்வளவு அக்கறையா இருக்கா... அந்த பாசம் எனக்குத்தான் தெரியும், பேசாம வளையல் போட உட்காரு என்று கடிந்து சொல்ல மறு பேச்சு பேசாமல் முறைப்புடன் மனையில் உட்கார்ந்தாள். எல்லோரும் வளையல் போட்டு ஆசீர்வதிக்க கங்கா, கண்ணம்மாவை வா நீயும் வளையல் போட்டு விடு என்று கூற கண்ணம்மா வெற்றிலை சுண்ணாம்பு மணக்க ஒரு பாட்டை பாடி வளையல் போட்டு ஆசீர்வாதம் செய்தாள். சுமதி நெளிந்து கொண்டே வேண்டா வெறுப்போடு ஆசீர்வாதத்தை ஏற்றுக் கொண்டாள். அம்மாவின் வீட்டிற்கு வந்த பின் சுமதிக்கு கண்ணம்மா மேல் வெறுப்பு அதிகமாகியது. ஆனால் கண்ணம்மா தன் நிலையில் சிறிதும் மாற்றம் இல்லாமல் சுமதிக்கண்ணு நேரா படுக்காதே.. ஒரு பக்கமாவே படுத்து எந்திரி.. வயத்தை சொறியாதே.. உன் பிள்ளைக்கு தலை முடி நிறைய போல.. அரிக்கத்தான் செய்யும் அதனால தேங்காய் எண்ணெய் தடவி விடுறேன்.. கீழே உட்காராதே, சேர்ல உட்கார்ந்து எந்திரி கண்ணு.. என்று தினமும் அக்கறையாக சொல்வதை கடுப்புடன் அம்மாவிற்காக சகித்து கொண்டாள். நாட்கள் நகர்ந்து பிரசவ காலம் நெருங்க டாக்டர் பரிசோதித்து ஒரு வாரத்தில் குழந்தை பிறந்து விடும் என்று கூறி அனுப்பினார்.

       மறுநாள் பக்கத்து ஊரில் உறவினர் யாரோ இறந்து விட கங்கா காலையில் அங்கு கிளம்பினாள் நாளை நான் வந்து விடுவேன், அதுவரை சுமதிக்கு துணையாக இரு.. அய்யாவும் சுமதிக்கு துணையாக வீட்டில் தான் இருப்பார் என்று கூறி கிளம்பினாள். அன்று மதிய உணவு முடித்து விட்டு சிறிது ஓய்வாக சுமதி அமர்ந்திருந்தாள். சிறிது நேரத்தில் அவளுக்கு வலி தோன்ற வலியை பொறுத்துக் கொண்டு அப்பாவிடம் கூற அவர் டாக்சியை கூட்டி வருகிறேன் என்று கண்ணம்மாவிடம் சொல்லி விட்டு வெளியே கிளம்பிய ஐந்து நிமிடத்தில் பதற்றத்துடன் திரும்பினார். யாரோ அரசியல் பிரமுகர் ஒருவரை வெட்டி கொலை செய்து விட்டார்களாம்.. அதனால் எந்த பேருந்தும் இயங்காதுன்னு சொல்கிறார்கள். உன் அம்மா ஊரில் இருந்து வருவது எப்படியோ... பஸ்,டாக்ஸி எல்லாமே ஸ்டிரைக் என்று பதறினார்.. அவர் சொல்லி கொண்டிருக்கும் போதே சுமதிக்கு வலி அதிகமாகி துடிக்க ஆரம்பித்து விட்டாள்.

       கண்ணம்மா பிரசவம் பார்த்த அனுபவத்தில் சுமதிக்கு ஆதரவாக பேசி அவளின் வயிற்றை தொட்டு பார்த்தே பயப்படாதே கண்ணு.. சுகமா குழந்தை பிறந்திடும்,அஞ்சு நிமிஷத்தில வெண்ணெய், மிளகு, பனங்கல்கண்டு போட்டு கஷாயம் போட்டு தரேன்.. மடக்குனு குடிச்சிடு... என்று ஓடிப்போய் கஷாயம் போட்டு குடிக்க கொடுத்தாள். சுமதி மறுக்க அவளின் தந்தை சமாதானபடுத்தி குடிக்க செய்தார். அடுத்த பத்து நிமிடத்தில் வலி அதிகமாகி சுமதி அலற ஆரம்பிக்க சதாசிவத்திடம் அய்யா.. வண்டி ஏதும் கிடைக்கலியேன்னு கவலை படாதீங்க,சுமதிக்கண்ணுக்கு சுக பிரசவம் ஆயிடும்அய்யா... நான் பாத்துக்கிடுதேன். ஒன்னும் ஆகாது கொஞ்சம் வெளியே இருங்க.. என்று சொல்லிக்கொண்டே மருத்துவரை போல பிரசவம் பார்க்க ஆரம்பித்து விட்டாள். சிறிது நேரத்தில் குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு சதாசிவம் சந்தோஷத்தோடும் அதே சமயம் சுமதிக்கு என்னவோ என்ற பயத்தோடும் அவஸ்தை பட்டுக் கொண்டிருந்தார். கண்ணம்மா குழந்தையை குளிப்பாட்டி தொப்புள் கொடி அறுத்து சுமதியின் அருகில் படுக்க போட்டு விட்டு வெளியே வந்து அய்யா.... உங்க பேரனை போய் பாருங்க செவேல்னு ராசா மாதிரி பிறந்திருக்கான் என்று கூறினாள். சிறிது நேரத்தில் ஒரு காட்டன் சேலையை எடுத்து கொண்டு உள்ளே வந்தவள் கண்ணு.. இந்த சேலையை இடுப்பில கட்டி விட்டா வயிறு எப்பவும் போல முந்தி இருந்த மாதிரி இருக்கும் என்று சொல்லிக் கொண்டே சுமதிக்கு உதவ சேலையை கழுத்தில் போட்டு கொண்டு கைத்தாங்கலாக சுமதியை தூக்கி விட்டாள்.

       சுமதியின் மனதில் கண்ணம்மாவின் கழுத்தை சுற்றி போட்ட சேலை ஸ்டெதஸ்கோப் போல் தெரிய அவளின் தூக்கி கட்டிய கொப்புக்கொண்டை ஒரு நர்ஸின் தலை தொப்பி போல் தெரிய ஒரு டாக்டரும் நர்ஸும் பக்கத்தில் இருக்கும் மன தைரியம் வர சுமதியின் மனதில் ஏனோ
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல்.
என்ற குறளின் வரிகள் நினைவு வர கண்களில் கண்ணீர் வர விசும்பினாள். கண்ணம்மா பதறிப் போய் ஏங்கண்ணு... அம்மா பக்கத்துல இல்லாம போயிட்டாங்களேன்னு வருத்தப்படுறியா.. இந்த டிரைக் (ஸ்டிரைக்)கொஞ்ச நேரத்தில முடிஞ்சுடும்... பஸ்,கார் எல்லாம் ஓட ஆரம்பிச்சுடும்.. அம்மா இன்னிக்கி ராத்திரி வந்துருவாங்க.. என்று காரணம் புரியாமல் அவளை சமாதான படுத்தி அவளின் அடுத்த தேவைகளை செய்ய ஆயத்தமானாள்.
Read More...

கரிசல் தோட்ட கருங்குருவி

20 comments
ஷாப்பிங் போறது,டூர் போறது,இதெல்லாம் ஒரு மனுஷனோட செக்கு மாட்டு வாழ்க்கைக்கு ஒரு சந்தோஷத்தை கொடுக்கிறதுதான்..ஆனா அதை விட சந்தோஷம் ஒரு தோட்டத்தில அறுவடை செய்யும் நேரம் சுற்றிலும் பறக்கும், ஊர்ந்து செல்லும் ஜீவராசிகளை பார்ப்பது நல்ல பொழுதுபோக்கு..! வாங்க... சோளம் விதைச்ச தோட்டத்துக்கு போவோம்.சோளதட்டையை பார்த்தாலே சிறு வயதில் கேட்ட கதைதான் நினைவுக்கு வரும்.
செல்லமா வளர்த்த ஒரு பெண் கல்யாணம் பண்ணி புகுந்த வீட்டுக்கு போனாளாம்.புகுந்த வீட்டில் மாமியார் பின்புற தோட்டத்தில் மாமரத்தில் மாங்காய் பறிக்க சொல்ல மருமகள் "எனக்கென்ன தெரியும் செல்ல பிள்ளைக்கு "என்று சொல்லி வேலை செய்யாமல் இருக்க, மறுநாள் விடியும் பொழுது துளசி மாடத்திற்கு விளக்கு வைக்க மாமியார் சொல்ல, மருமகள் "எனக்கென்ன தெரியும் செல்ல பிள்ளைக்கு "என்று சொல்லி இருக்கிறாள். மாமியாருக்கு "அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பியும் உதவ மாட்டான்" பழ மொழி நினைவுக்கு வர பாடத்தை ஆரம்பிச்சிட்டாங்க...மருமகளிடம் வீட்டு மூலையில் சார்த்தி இருக்கும்சோளதட்டை யில் ஒன்று எடுத்து வர சொல்ல, அவள் "எனக்கென்ன தெரியும் செல்ல பிள்ளைக்கு " என்று கூற மாமியார் எழுந்து போய் சோளத்தட்டையை உருவி சுத்தி சுத்தி அடிக்க மருமகள் அலறி கொண்டே ஐயோ! அது மாமரம்,இது மன்னவன் கோயில்,சுத்தி அடிக்கிறது சோளதட்டைன்னு சொல்லி அன்றில் இருந்து சொன்ன வேலையை தட்டாமல் செய்தாளாம்.
தோட்டம் வந்தாச்சு...crop cutter ல சோளத்தை கட் பண்ணி போடுறதை பாத்துட்டு அப்பிடியே ஒரு சுத்து வருவோம்.




எல்லாரும் போயிடுங்க....crop cutter வருது..ஜாக்கிரதை..!
இந்த கட்டிங் மெஷின் சோளத்தோட சோளமா நம்மையும் சேர்த்து சுருட்டி போட்டிருக்கும். யப்பா.. ஜஸ்ட் மிஸ்ஸிங்.. நினைத்தாலே ஈரக்குலை நடுங்குது..!
உங்க சோளத்தை திங்கலையே ... தேனைதானே குடிச்சேன்..
ரெக்கைய வெட்டிடீங்களே.. பாவிகளா..!
இந்த முருங்கக்காயை காய விட்டுட்டு போறா மாதிரி இந்த சோளத்தையும் காய விட்டுட்டு போலாமில்ல..நாங்க பிழைச்சிக்குவோம்..
இது என்ன கொடுமை! ஒடி ஒடி போட்டோ எடுக்கிறாங்க.. ச்சீ! வெட்கமா இருக்கு.. இலைக்கு பின்னாலே ஒளிஞ்சுடுவோம்...
அந்த கருத்த மாமா வந்திட்டார் ...எல்லாரும் ஒடுங்க ....! கருத்த கோழி மிளகு போட்டு வறுத்து வச்சிருக்கேன்....பாட்டு வேற பாடி பயம் காட்டறார்..இன்னிக்கு யாரு டிக்கெட் வாங்க போறோமோ......ஆண்டவா..!காப்பாத்தப்பா...!!
ஆண்டவன் " ஒரு கதவை மூடினா இன்னொரு கதவை திறப்பான்" தெரியுமில்லே..நீங்க சோளத்தை எடுத்துட்டு போனா....அட போய்யா.. நாட்டு சோளம் இருக்கில்ல எங்களுக்கு..

Read More...

ஜில்ஜில் ஜிகர்தண்டா

12 comments
நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜிகர்தண்டா பதிவோட உங்க அனைவருக்கும் வணக்கம்.சந்தர்ப்ப சூழ்நிலையோட கேமிரா ரிப்பேரும் சேர்ந்து பதிவே போட முடியல்லை.இப்ப அடிக்கிற வெயிலுக்கு மக்கள்ஸ் எல்லாருக்கும் ஆரோக்கியத்துல பல பிரச்சினைகள் வரும்.வாய் புண், வயிற்றுப்புண்,சிறுநீர் இறங்குவதில் பிரச்சினை,அதிகமாக தலைமுடி உதிர்தல்,இப்பிடி பல பிரச்சினைகள் வரும்.இதற்கெல்லாம் தீர்வு உணவே மருந்துதான்..இந்த வெயிலுக்கு தண்ணி பழம்,நுங்கு,இளநீர்,மோர்,சாப்பிடலாம்.இதோட வீட்டில நாமளே ஜிகர்தண்டா செய்து சாப்பிடலாம்.இதுல சேர்க்கிற ரோஸ் சிரப், நன்னாரி,பாதாம் பிசினால உடற்சூடு குறையும்.
தேவையான பொருட்கள் (நான்கு நபர்களுக்கு ):-
  • பாதாம் பிசின்                      - இரண்டு கட்டிகள்
  • ரோஸ் சிரப்                          -  எட்டு துளிகள்
  •  பால்                                        - 400 மில்லி
  •  நன்னாரி சிரப்                     - 4 குழி கரண்டி
  •  ஐஸ் க்யூப்                            -6 

செய்முறை:-
  • பாதாம் பிசினை  நன்றாக கழுவி விட்டு எட்டு மணி நேரம் ஊறவிட வேண்டும். 
  • ஊறிய பின் பாதாம் பிசின் நன்றாக பூத்து அளவில் அதிகமாக இருக்கும்.
  • ஒரு கிளாஸில் ஊறிய பாதாம் பிசின் சிறிது போட்டு இரண்டு துளிகள் ரோஸ் சிரப்,ஒரு குழி கரண்டி நன்னாரி சிரப்,நூறு மில்லி பால் சேர்த்து ஸ்பூனால் நன்றாக கலக்கி விட்டு இறுதியில் ஐஸ் கியூப்பை சேர்க்க வேண்டும்.
  • தேவை பட்டால் ஐஸ் கிரீம்  சேர்த்து கொள்ளலாம்.

Read More...

வீட்டு மருத்துவம் - 2

1 comment
தேள் கடி :
                 வெற்றிலையுடன் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு மென்று விழுங்கி சிறிது தேங்காய் துண்டுகளை மென்று தின்றால் விஷம் உடனே இறங்கும்
தலைவலி :
                          இரண்டு வெற்றிலையை கசக்கி சாறு எடுத்து அந்த சாற்றில் சிறிதளவு கற்பூரத்தை பொடித்து சேர்த்து குழப்பி வலியுள்ள இடத்தில் தடவினால் தலைவலி உடனே குணமாகும். 


Read More...

வீட்டு மருத்துவம் - 1

7 comments
                      நம் வீட்டிற்கு அருகில் முலிகை செடிகள் வளர்ந்திருந்தாலும் அதன் மருத்துவ பயன் தெரியாமல் நம்மில்  பலர் இருக்கின்றோம்.வீட்டில் நாம் பயன் படுத்தும் மளிகை பொருட்களிலும் மருத்துவ பயன் தெரியாமல் பலர் இருக்கின்றோம்.நான் பயன்பெற்று பயனடைந்த சில மருத்துவ குறிப்புக்களை இந்த பகுதியில் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்

                                                                   குப்பைமேனி 


உடலில் படை, பத்து,அலர்ஜியினால் அரிப்பு இவை இருந்தால் குப்பைமேனிசெடியின் இலைகள் ஒரு கைபிடி அளவு எடுத்து கசக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வந்தால் ஓரிரண்டு நாட்களில் குணம் காணலாம். 

Read More...

கற்பனையில் உருவானவை

5 comments
எனது  மகன் பிரதீப் .இவருக்கு கிரியேட்டிவ் மைன்ட் அதிகம். மார்க்கட்டில் வாங்கிய பச்சை மிளகாயில் சில காய்கள் வட்டமாக சுருண்டு இரட்டை காய்களாக இருந்தன .அவற்றை பிரதீப்பிடம் கொடுத்தேன் .அதை நடனம் ஆடும் மிளகாய்  பெண்ணாக உருவாக்கியதைதான் நீங்கள் போட்டோவில் பார்க்கின்றீர்கள் .நன்றாக உள்ளதா...கற்பனையில் உருவானவைகளை பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் .கற்பனை தொடரும்...

Read More...

இஞ்சி சட்னி

Leave a Comment
தேவை யான பொருட்கள் :
  • இஞ்சி                          - 50 கிராம்   
  • மிளகாய் வத்தல்    - 5 
  • புளி                               - நெல்லி அளவு 
  • தேங்காய்                  - சிறிது 
  • பெருங்காயம்          - ஒரு சிட்டிகை
  • எண்ணெய்                - இரண்டு தேக்கரண்டி
  • கருவேப்பிலை       - ஒரு ஆர்க்கு 
செய்முறை :
  • இஞ்சியை நன்றாக  கழுவி தோல் சீவி பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.  
  • தேங்காயை பொடியாக நறுக்கி கொள்ளவேண்டும். 
  • அடுப்பில் வாணலியை  வைத்து ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி இஞ்சி ,தேங்காயை அதில் போட்டு சிவப்பு நிறம் வரும் வரை வறுத்து பின்பு புளி, வத்தல், கருவேப்பிலை, பெருங்காயம்,போட்டு வதக்கி மிக்சியில்சிறிது உப்புடன் வதக்கிய பொருட்கள் அனைத்தையும் சேர்த்து அரைத்து எடுக்க வேண்டும்.
  • இதனுடன் சிறிது எண்ணையில் கடுகு,உளுந்து தாளித்து சேர்க்கவேண்டும்.






.



Read More...

இட்லி சாம்பார்

2 comments

தேவையான பொருட்கள் :
  • துவரம் பருப்பு           -  ஒரு கப்
  • மஞ்சள்பொடி           -  ஒரு சிட்டிகை
  • பெருங்காயம்           - ஒரு சிட்டிகை
  • சின்ன வெங்காயம்  -  பத்து
  • தக்காளி                     -  இரண்டு
  • மிளகாய் பொடி       - ஒரு  ஸ்பூன்
  • கருவேப்பிலை,மல்லி தழை   - சிறிது
  • எலுமிச்சை                  - அரை  முடி
  • கடுகு                           -ஒரு  ஸ்பூன்
  • எண்ணெய்                 - இரண்டு ஸ்பூன்    
செய்முறை :
  • துவரம் பருப்பை  நன்றாக  கழுவி குக்கரில் 2 கப் தண்ணீர்  விட்டு அதில் மஞ்சள்பொடி,பெருங்காயத்துடன் பருப்பை சேர்த்து 3 விசில் வரும் வரை வேகவிட  வேண்டும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்ற கடுகு,உளுந்தம் பருப்பு போட்டு தாளித்து நறுக்கிய வெங்காயம் ,தக்காளி  சேர்த்து  வதக்க வேண்டும்..
  • வதக்கிய பொருட்களுடன்  மிளகாய்பொடியை சேர்த்து சிறிது  வதக்கி ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதித்தவுடன்  வேகவைத்த பருப்பை சேர்த்து நன்றாக கொதித்தவுடன்  தேவையான அளவு உப்பை சேர்த்து இறக்கி விடவேண்டும்,
  • இறக்கி வைத்த சாம்பாரில் அரை முடி எலுமிச்சை பிளிந்துவிடவேண்டும்,,


    Read More...

    பருத்திப்பால்

    4 comments
    தேவையான பொருட்கள்:
    • பருத்தி விதை         - 2 கைபிடி 
    • கருப்பட்டி             - 100 கிராம் 
    • தேங்காய் பால்        - அரை மூடி
    • சுக்கு                - அரைவிரளளவு
    • அரிசி மாவு           - 2 ஸ்பூன் 
    • ஏலக்காய்          - 2
    செய்முறை:
    •  பருத்தி விதையை முதல் நாள் இரவு தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். காலையில் ஊறிய விதையை மிக்சியில் சிறிது தண்ணீர் விட்டு அரைத்து பால் எடுக்க வேண்டும்.  
    • கருப்பட்டியை தூளாக்கி ஒரு கப் தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டி கொள்ளவேண்டும் .
    • ஓரு பாத்திரத்தில் பருத்திவிதை பாலை ஊற்றி காய்ச்ச வேண்டும் .ஒரு கொதி வந்த உடன் கருப்பட்டி பாலையும் தேங்காய்  பாலையும் ஊற்றி காய்ச்ச  வேண்டும்.
    • இந்த கலவை கொதிக்கும் போது அரிசி மாவில் சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து அக் கலவையை கொதிக்கும் பருத்தி பாலில் சேர்த்து கரண்டியால் தொடர்ந்து இரண்டு நிமிடம் கிளறி பாத்திரத்தை இறக்கி விடவேண்டும்.
    • சுக்கை சிறிது வறுத்து பொடியாக்கி ,ஏலக்காயை பொடியாக்கி இறுதியில் சேர்க்க வேண்டும்.
    Read More...

    தக்காளி காரசட்னி

    Leave a Comment


     தேவையானவை:
    • தக்காளி - 5
    • பூண்டூ - 5 பல்
    • மிளகாய் பொடி - 2ஸ்பூன்
    • மல்லி இலை - 2 தழைகள்
    • சின்னவெங்காயம் - 5
    • உப்பு - 1 ஸ்பூன்
    • எண்ணை - 50மில்லி
    • கடுகு,கருவேப்பிலை - சிறிது
     செய்முறை :
    • எண்ணை தவிர அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் நைசாக அரைத்து கொள்ளவேண்டும்.
    • அடுப்பில் வாணலியை வைத்து 50மில்லி எண்ணையை ஊற்றி ,காய்ந்ததும் கடுகு,கருவேப்பிலை போட்டு வெடித்தவுன் அரைத்த விழுதை சேர்த்து தளதளவென எண்ணை பிரியும்வரை கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.


    Read More...