தாழம் பூ

17 comments
       வீட்டின் பக்கத்தில் இருந்த மரத்தில் இருந்த பறவைகள் கத்திய ஒலியும், சேவலின் கொக்கரக்கோ கூவலும் கங்காவிற்கு காலை விடியலை உணர்த்தியது. படுக்கையில் இருந்து எழுந்தவள் இரண்டு நாட்களாக கண்ணம்மா வேலைக்கு வரவில்லை. இன்றாவது வருவாளா.. உடம்பு சரியாகி இருக்கும், வருவாள் என்று எண்ணிக் கொண்டே காலை கடன்களை முடித்தவள் மற்ற வேலைகளை செய்ய சுறு சுறுப்பாக ஆயத்தமானாள். காபி டிகாஷனை இறக்கி பால் சேர்த்து நுரை பொங்க ஆற்றிக் கொண்டே கணவனை எழுப்பினாள். அவளுடைய கணவன் சதாசிவம் காபியை குடித்து முடிக்கும் வரை அருகில் இருந்தவள் படுக்கை அறையை சுத்தம் செய்து கொண்டே மெல்ல கணவனிடம் ஏங்க... இந்த வாரம் நல்ல நாள் பார்த்து வளைகாப்பு செய்து நம்ம சுமதியை வீட்டுக்கு அழைத்து வரணும், இப்ப அவளுக்கு இது ஏழாவது மாதம் என்றாள். சதாசிவமும் சரி அழைத்து வருவோம் என்றார்.

       கிறீச்சென்று கேட் திறக்கும் சத்தம் கேட்டது. கண்ணம்மாதான் கேட்டை திறந்து வந்து கொண்டிருந்தாள். அப்பாடா... வந்தாச்சா.. உடம்பு சுகமாயிருச்சா... நீயில்லாம வேலையே ஆக மாட்டேங்குது கண்ணம்மா.. இந்தா முதல்ல இந்த காபியை குடி, அடுத்து வேலையை பாக்கலாம் என்றாள். காலை டிபன் தயார் பண்ணி கொண்டிருந்த வேளையில் அம்மா.. நம்ம பாப்பாவை எப்ப கூப்பிட போறீங்க..? கல்யாணத்தப்ப பாத்தது நம்ம சுமதியம்மாவை..என்றாள். ஆமா.. கண்ணம்மா இந்த வாரம் வளைகாப்பு வச்சிருக்கு.. நீயும் கூட வா.. என்றாள். அம்மா நா ஒரு மனுஷின்னு என்னைப் போயி கூப்பிடறீங்க.. வெற்றிலை கரை படிந்த பல் தெரிய வெள்ளந்தி சிரிப்புடன் கேட்டாள் கண்ணம்மா.ஏன் கண்ணம்மா நீ வயசுல பெரிய மனுஷி.. சுமதிய தூக்கி வளர்த்தவ.. தொடர்ந்து ரெண்டு வருஷம் ஒரு வீட்ல வேலை பார்க்க முடியாம வேற வீட்டை பார்த்து போற இந்த காலத்தில நீ இந்த வீட்டுக்கு இருபது வருஷமா தினம் வந்து வேலை பாக்குறே... நீயும் இந்த வீட்டை சேர்ந்த ஒரு உறவுக்கார பெண்தான். அதனால இந்த வாரம் சுமதிய போய் பார்த்து வளைகாப்பு செய்து அழைத்து வருவோம் என்றாள். இதை கேட்டு சிரித்துக் கொண்டே சரிம்மா வர்றேன் என்று சொல்லி விட்டு வேலைகளை செய்ய துவங்கினாள்.

       வளைகாப்பிற்கு சுமதியை அழைக்கும் அன்று கண்ணம்மா கொப்புகொண்டை போட்டு கனகாம்பரம் சூடி கண்டாங்கி சேலையோடு வீட்டிற்கு வந்து மாங்கு மாங்கென்று சாதவகைகள் செய்து கங்காவிற்கு அனைத்து உதவிகளையும் செய்து அனைவரோடு சேர்ந்து ஊருக்கு கிளம்பினாள். மாப்பிள்ளை வீட்டில் கலகலப்பாக அனைவரையும் வரவேற்று உபசரித்தனர்.சுமதிக்கு கண்ணம்மாவின் உடை, வெற்றிலை வாய் இவையெல்லாம் பிடிக்காமல் கங்காவின் காதோரம் மெல்ல கிசு கிசுப்பாக ஏம்மா.. இவளையெல்லாம் கூட்டிட்டு வந்தே.. மாமியார் வீட்டில் என் மானம் கப்பல் ஏறிடும் என்று கோபத்துடன் கேட்க முறைப்புடன் கங்கா மகளை சும்மா இருடி அவ உன் மேல எவ்வளவு அக்கறையா இருக்கா... அந்த பாசம் எனக்குத்தான் தெரியும், பேசாம வளையல் போட உட்காரு என்று கடிந்து சொல்ல மறு பேச்சு பேசாமல் முறைப்புடன் மனையில் உட்கார்ந்தாள். எல்லோரும் வளையல் போட்டு ஆசீர்வதிக்க கங்கா, கண்ணம்மாவை வா நீயும் வளையல் போட்டு விடு என்று கூற கண்ணம்மா வெற்றிலை சுண்ணாம்பு மணக்க ஒரு பாட்டை பாடி வளையல் போட்டு ஆசீர்வாதம் செய்தாள். சுமதி நெளிந்து கொண்டே வேண்டா வெறுப்போடு ஆசீர்வாதத்தை ஏற்றுக் கொண்டாள். அம்மாவின் வீட்டிற்கு வந்த பின் சுமதிக்கு கண்ணம்மா மேல் வெறுப்பு அதிகமாகியது. ஆனால் கண்ணம்மா தன் நிலையில் சிறிதும் மாற்றம் இல்லாமல் சுமதிக்கண்ணு நேரா படுக்காதே.. ஒரு பக்கமாவே படுத்து எந்திரி.. வயத்தை சொறியாதே.. உன் பிள்ளைக்கு தலை முடி நிறைய போல.. அரிக்கத்தான் செய்யும் அதனால தேங்காய் எண்ணெய் தடவி விடுறேன்.. கீழே உட்காராதே, சேர்ல உட்கார்ந்து எந்திரி கண்ணு.. என்று தினமும் அக்கறையாக சொல்வதை கடுப்புடன் அம்மாவிற்காக சகித்து கொண்டாள். நாட்கள் நகர்ந்து பிரசவ காலம் நெருங்க டாக்டர் பரிசோதித்து ஒரு வாரத்தில் குழந்தை பிறந்து விடும் என்று கூறி அனுப்பினார்.

       மறுநாள் பக்கத்து ஊரில் உறவினர் யாரோ இறந்து விட கங்கா காலையில் அங்கு கிளம்பினாள் நாளை நான் வந்து விடுவேன், அதுவரை சுமதிக்கு துணையாக இரு.. அய்யாவும் சுமதிக்கு துணையாக வீட்டில் தான் இருப்பார் என்று கூறி கிளம்பினாள். அன்று மதிய உணவு முடித்து விட்டு சிறிது ஓய்வாக சுமதி அமர்ந்திருந்தாள். சிறிது நேரத்தில் அவளுக்கு வலி தோன்ற வலியை பொறுத்துக் கொண்டு அப்பாவிடம் கூற அவர் டாக்சியை கூட்டி வருகிறேன் என்று கண்ணம்மாவிடம் சொல்லி விட்டு வெளியே கிளம்பிய ஐந்து நிமிடத்தில் பதற்றத்துடன் திரும்பினார். யாரோ அரசியல் பிரமுகர் ஒருவரை வெட்டி கொலை செய்து விட்டார்களாம்.. அதனால் எந்த பேருந்தும் இயங்காதுன்னு சொல்கிறார்கள். உன் அம்மா ஊரில் இருந்து வருவது எப்படியோ... பஸ்,டாக்ஸி எல்லாமே ஸ்டிரைக் என்று பதறினார்.. அவர் சொல்லி கொண்டிருக்கும் போதே சுமதிக்கு வலி அதிகமாகி துடிக்க ஆரம்பித்து விட்டாள்.

       கண்ணம்மா பிரசவம் பார்த்த அனுபவத்தில் சுமதிக்கு ஆதரவாக பேசி அவளின் வயிற்றை தொட்டு பார்த்தே பயப்படாதே கண்ணு.. சுகமா குழந்தை பிறந்திடும்,அஞ்சு நிமிஷத்தில வெண்ணெய், மிளகு, பனங்கல்கண்டு போட்டு கஷாயம் போட்டு தரேன்.. மடக்குனு குடிச்சிடு... என்று ஓடிப்போய் கஷாயம் போட்டு குடிக்க கொடுத்தாள். சுமதி மறுக்க அவளின் தந்தை சமாதானபடுத்தி குடிக்க செய்தார். அடுத்த பத்து நிமிடத்தில் வலி அதிகமாகி சுமதி அலற ஆரம்பிக்க சதாசிவத்திடம் அய்யா.. வண்டி ஏதும் கிடைக்கலியேன்னு கவலை படாதீங்க,சுமதிக்கண்ணுக்கு சுக பிரசவம் ஆயிடும்அய்யா... நான் பாத்துக்கிடுதேன். ஒன்னும் ஆகாது கொஞ்சம் வெளியே இருங்க.. என்று சொல்லிக்கொண்டே மருத்துவரை போல பிரசவம் பார்க்க ஆரம்பித்து விட்டாள். சிறிது நேரத்தில் குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு சதாசிவம் சந்தோஷத்தோடும் அதே சமயம் சுமதிக்கு என்னவோ என்ற பயத்தோடும் அவஸ்தை பட்டுக் கொண்டிருந்தார். கண்ணம்மா குழந்தையை குளிப்பாட்டி தொப்புள் கொடி அறுத்து சுமதியின் அருகில் படுக்க போட்டு விட்டு வெளியே வந்து அய்யா.... உங்க பேரனை போய் பாருங்க செவேல்னு ராசா மாதிரி பிறந்திருக்கான் என்று கூறினாள். சிறிது நேரத்தில் ஒரு காட்டன் சேலையை எடுத்து கொண்டு உள்ளே வந்தவள் கண்ணு.. இந்த சேலையை இடுப்பில கட்டி விட்டா வயிறு எப்பவும் போல முந்தி இருந்த மாதிரி இருக்கும் என்று சொல்லிக் கொண்டே சுமதிக்கு உதவ சேலையை கழுத்தில் போட்டு கொண்டு கைத்தாங்கலாக சுமதியை தூக்கி விட்டாள்.

       சுமதியின் மனதில் கண்ணம்மாவின் கழுத்தை சுற்றி போட்ட சேலை ஸ்டெதஸ்கோப் போல் தெரிய அவளின் தூக்கி கட்டிய கொப்புக்கொண்டை ஒரு நர்ஸின் தலை தொப்பி போல் தெரிய ஒரு டாக்டரும் நர்ஸும் பக்கத்தில் இருக்கும் மன தைரியம் வர சுமதியின் மனதில் ஏனோ
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல்.
என்ற குறளின் வரிகள் நினைவு வர கண்களில் கண்ணீர் வர விசும்பினாள். கண்ணம்மா பதறிப் போய் ஏங்கண்ணு... அம்மா பக்கத்துல இல்லாம போயிட்டாங்களேன்னு வருத்தப்படுறியா.. இந்த டிரைக் (ஸ்டிரைக்)கொஞ்ச நேரத்தில முடிஞ்சுடும்... பஸ்,கார் எல்லாம் ஓட ஆரம்பிச்சுடும்.. அம்மா இன்னிக்கி ராத்திரி வந்துருவாங்க.. என்று காரணம் புரியாமல் அவளை சமாதான படுத்தி அவளின் அடுத்த தேவைகளை செய்ய ஆயத்தமானாள்.
Read More...

முன்றாவது விருது

31 comments
வை.கோபால கிருஷ்ண அண்ணன் அடுத்து அடுத்து இரண்டு விருது கொடுத்து எனது வலை பூவை சிறப்பித்துள்ளார். இரண்டாவது விருதாக SUNSHINE BLOGGER விருதையும்
மூன்றாவது விருதாக LIBESTER விருதை கொடுத்து எனது வலை பூவை சிறப்பித்துள்ளார்கள்.அண்ணனுக்கு எனது பாராட்டுக்கள்..! மிக்க நன்றியண்ணா..! இந்த விருதை நான் எனது வலையுலக உறவுகளுக்கு பகிர்கின்றேன்.

Read More...

குழாய் புட்டு

18 comments

தேவையான பொருட்கள்:-
  • பச்சரிசி மாவு              -    250 கிராம்
  • சர்க்கரை                      -  150 கிராம்
  • தேங்காய் துருவல்  - அரை மூடி
செய்முறை:-
  • பச்சரிசி மாவை லேசாக வறுத்து பாத்திரத்தில் போட்டு தண்ணீரை சிறிது சிறிதாக விட்டு கட்டி இல்லாமல் உதிரியாக பிசைந்து கொள்ள வேண்டும்.
  • புட்டு குழாய் பாத்திரத்தை எடுத்து அடியில் உள்ள பாத்திரத்தில் பாதி அளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்க வேண்டும்.
  • புட்டு குழாயில் சிறிது வெண்ணெய் எடுத்து உட்புற பகுதியில் தடவி சிறிது மாவை எடுத்து குழாயில் போட்டு அதன் மேல் சிறிது தேங்காய் துருவல் அதன் மேல் சிறிது சர்க்கரை என போட்டு மூடி வைத்து மூடி புட்டு குழாய் பாத்திரத்தின் மேல் புட்டு குழாயை வைத்து ஆவியில் மாவு வேகும் வரை சுமார் 10 நிமிடங்கள் வைக்க வேண்டும்.
  • புட்டு குழாயை தனியாக எடுத்து ஒரு தட்டில் வைத்து பிளாஸ்டிக் குச்சியினால் புட்டு மாவை அச்சாக குழாயில் இருந்து வெளியே தள்ள வேண்டும்.குழாய் புட்டு தயார்.
  • இதை வாழை பழத்துடனோ,கடலை கறியுடனோ சாப்பிட சுவையாக இருக்கும்.
Read More...

முருங்கைக்காய் கொத்சு

22 comments
தேவையான பொருட்கள்:-
  • முருங்கைகாய்                      - 10
  • பச்சை மிளகாய்                     - 5
  • தக்காளி                                    - 2
  • சின்ன வெங்காயம்             - 10
  • பாசிப்பருப்பு                           - 1 கப்
  • சீரகம்                                       - சிறிது 
  • தேங்காய்                              - சிறிது 
  • மல்லி,கருவேப்பிலை   - சிறிது
  • உப்பு,மஞ்சள் தூள்           - சிறிது 
  • ஆயில்                                - 2 ஸ்பூன் 
  • கடுகு,உளுந்தம் பருப்பு  - 1 ஸ்பூன் 

செய்முறை:-
  • முருங்கைகாயை கட் பண்ணி சிறிது நீர் விட்டு வேக வைக்க வேண்டும். வெந்த காயை கீறி உள்ளிருக்கும் சதை பகுதியை தனியாக எடுக்க வேண்டும் .

  • பச்சை மிளகாய்,சின்ன வெங்காயம்,தக்காளியை நறுக்கி வைக்க வேண்டும் .
  • அடுப்பில் வாணலியை வைத்து ஆயிலை  ஊற்றி கடுகு , உளுந்து போட்டு  வெடித்ததும் நறுக்கிய   பச்சை மிளகாய்,வெங்காயம் ,தக்காளி,கருவேப்பிலை  போட்டு  வதக்க வேண்டும் .

  • நன்றாக வதங்கிய  பின் முருங்கைகாய்  சதை பகுதியை போட்டு வேக வைத்த பாசிப்பருப்பையும் போட்டு உப்பு,மஞ்சள் பொடியுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும் .

  • கடைசியாக  அரைத்த சீரகம்,தேங்காயை சேர்த்து  கிளறி தண்ணீர் சுண்டிய  உடன் உப்பு சரி பார்த்து  இறக்கி விட வேண்டும் .
  • முருங்கைகாய்  வேக வைத்த தண்ணீரில் தக்காளி ரசம் செய்தால் சுவையாக இருக்கும் .

    Read More...

    கரிசல் தோட்ட கருங்குருவி

    20 comments
    ஷாப்பிங் போறது,டூர் போறது,இதெல்லாம் ஒரு மனுஷனோட செக்கு மாட்டு வாழ்க்கைக்கு ஒரு சந்தோஷத்தை கொடுக்கிறதுதான்..ஆனா அதை விட சந்தோஷம் ஒரு தோட்டத்தில அறுவடை செய்யும் நேரம் சுற்றிலும் பறக்கும், ஊர்ந்து செல்லும் ஜீவராசிகளை பார்ப்பது நல்ல பொழுதுபோக்கு..! வாங்க... சோளம் விதைச்ச தோட்டத்துக்கு போவோம்.சோளதட்டையை பார்த்தாலே சிறு வயதில் கேட்ட கதைதான் நினைவுக்கு வரும்.
    செல்லமா வளர்த்த ஒரு பெண் கல்யாணம் பண்ணி புகுந்த வீட்டுக்கு போனாளாம்.புகுந்த வீட்டில் மாமியார் பின்புற தோட்டத்தில் மாமரத்தில் மாங்காய் பறிக்க சொல்ல மருமகள் "எனக்கென்ன தெரியும் செல்ல பிள்ளைக்கு "என்று சொல்லி வேலை செய்யாமல் இருக்க, மறுநாள் விடியும் பொழுது துளசி மாடத்திற்கு விளக்கு வைக்க மாமியார் சொல்ல, மருமகள் "எனக்கென்ன தெரியும் செல்ல பிள்ளைக்கு "என்று சொல்லி இருக்கிறாள். மாமியாருக்கு "அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பியும் உதவ மாட்டான்" பழ மொழி நினைவுக்கு வர பாடத்தை ஆரம்பிச்சிட்டாங்க...மருமகளிடம் வீட்டு மூலையில் சார்த்தி இருக்கும்சோளதட்டை யில் ஒன்று எடுத்து வர சொல்ல, அவள் "எனக்கென்ன தெரியும் செல்ல பிள்ளைக்கு " என்று கூற மாமியார் எழுந்து போய் சோளத்தட்டையை உருவி சுத்தி சுத்தி அடிக்க மருமகள் அலறி கொண்டே ஐயோ! அது மாமரம்,இது மன்னவன் கோயில்,சுத்தி அடிக்கிறது சோளதட்டைன்னு சொல்லி அன்றில் இருந்து சொன்ன வேலையை தட்டாமல் செய்தாளாம்.
    தோட்டம் வந்தாச்சு...crop cutter ல சோளத்தை கட் பண்ணி போடுறதை பாத்துட்டு அப்பிடியே ஒரு சுத்து வருவோம்.




    எல்லாரும் போயிடுங்க....crop cutter வருது..ஜாக்கிரதை..!
    இந்த கட்டிங் மெஷின் சோளத்தோட சோளமா நம்மையும் சேர்த்து சுருட்டி போட்டிருக்கும். யப்பா.. ஜஸ்ட் மிஸ்ஸிங்.. நினைத்தாலே ஈரக்குலை நடுங்குது..!
    உங்க சோளத்தை திங்கலையே ... தேனைதானே குடிச்சேன்..
    ரெக்கைய வெட்டிடீங்களே.. பாவிகளா..!
    இந்த முருங்கக்காயை காய விட்டுட்டு போறா மாதிரி இந்த சோளத்தையும் காய விட்டுட்டு போலாமில்ல..நாங்க பிழைச்சிக்குவோம்..
    இது என்ன கொடுமை! ஒடி ஒடி போட்டோ எடுக்கிறாங்க.. ச்சீ! வெட்கமா இருக்கு.. இலைக்கு பின்னாலே ஒளிஞ்சுடுவோம்...
    அந்த கருத்த மாமா வந்திட்டார் ...எல்லாரும் ஒடுங்க ....! கருத்த கோழி மிளகு போட்டு வறுத்து வச்சிருக்கேன்....பாட்டு வேற பாடி பயம் காட்டறார்..இன்னிக்கு யாரு டிக்கெட் வாங்க போறோமோ......ஆண்டவா..!காப்பாத்தப்பா...!!
    ஆண்டவன் " ஒரு கதவை மூடினா இன்னொரு கதவை திறப்பான்" தெரியுமில்லே..நீங்க சோளத்தை எடுத்துட்டு போனா....அட போய்யா.. நாட்டு சோளம் இருக்கில்ல எங்களுக்கு..

    Read More...